கொள்ளையர்களிடமிருந்து தமது பெறுமதிமிக்க பொருட்களை பாதுகாத்துக் கொள்வது தொடர்பில் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் நேற்று கருத்து தெரிவித்த அவர், தமிழ் – சிங்கள புதுவருட பிறப்புக்கு இன்னும் ஒரு வாரகாலமே உள்ளது. இந்நிலையில் மக்கள் தற்போது புதுவருட கொண்டாட்டத்துக்கான பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்தக் காலப் பகுதிகளில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் மற்றும் பல்வேறு குற்றச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்களினால் மேற்கொள்ளப்படும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
அதற்கமைய வீட்டை விட்டு வெளியேறும் போது , கொள்ளையர்களிடமிருந்து தமது பெறுமதி மிக்க பொருட்களை பாதுகாத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன்போது தங்க நகைகள் அணிந்து செல்பவர்கள் மேலும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.பெண்கள் பயன்படுத்தும் கைப் பைகளையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். கொள்ளையர்கள் பல்வேறு முறைகளை கையாண்டு அவற்றை கொள்ளையிடுவதற்கு வாய்ப்புள்ளது.
மோட்டார் சைக்கிள்கள் , சைக்கிள்கள் , முச்சக்கர வண்டிகள் உட்பட வாகன கொள்ளைகளும் தற்போது பதிவாகி வருகின்றன. அதனால் வாகனங்களில் செல்பவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லும் போது அதனை பாதுகாப்பாக வைத்து செல்ல வேண்டும் என்றார்